Sunday, July 29, 2007

கோவை-தமிழகத்தின் டெட்ராய்ட்

கொங்கு மண்டலம், கோவை, கோனியம்மன்புத்தூர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுவது தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர்.
தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித் தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன.
இதமான தட்பவெப்பம், விருந்தோம்பலில் வெளுத்துக் கட்டும் இனிய மக்கள் என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் உள்ள கோவை, இப்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பச்சைக் கம்பளம் விரித்து விண்ணதிர வளர காத்திருக்கிறது.
வரலாறு:
நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் அழகிய நகரம் கோவை. மதுரைக்கு எப்படி மீனாட்சியோ அதுபோல, கோவைக்கு கோணியம்மமன். அதனால்தான் கோணியம்மன் ஆட்சி புரியும் நகரம் என்பதால் கோவை மாநகருக்கு கோணியம்மன்புத்தூர் என்றும் ஒரு பெயர் உண்டு.சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர் சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது.
கரிகால் சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் ராஷ்டிரகூடர்கள் கைக்கும் கொங்கு பூமி மாறியது. மைசூரை ஆண்ட கங்க மன்னர்கள் கையிலும் சில காலம் கோவை தவழ்ந்தது. அதன் பின்னர் சாளுக்கியர்களும், தொடர்ந்து பல்லவர்களும் கோவை மண்டலத்தை ஆட்சி புரிந்துள்ளனர். சில காலம் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கைக்கும் கோவை இடம் மாறியிருந்தது.
9வது நூற்றாண்டில் மீண்டும் சோழர் கைக்கு கோவை மாறியபோதுதான் கோவை மாநகரத்தை அழகான, திட்டமிட்ட ஒரு நகரமாக மாற்றினார்கள். நகரின் மையத்தில் கோணியம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதைச் சுற்றிலும் நகரம் உருவாக்கப்பட்டது.அந்த ஊருக்கு கோவன்புதூர் என்று பெயரும் சூட்டப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவனின் பெயர் தான் கோவன். அவரது பெயராலேயே அந்த ஊர் நிர்மாணிக்கப்பட்டது. இதுதான் பின்னர் கோயம்புத்தூர் என்று உருமாறியது.கோவையை வளர்த்த பெருமை இருளர் சமுதாயத்திற்கு உண்டு. ஊரைச் சுற்றிலும் அவர்கள் ஏராளமான குளங்களையும், ஏரிகளையும் வெட்டினர். இன்றளவும் அந்த குளங்கள் கோவை மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பது வரலாற்றையும் மீறிய சாதனைப் பதிவு.சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வது ஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. அதன் பின்னர் 14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகம்மதியர்கள் கோவையைக் கைப்பற்றினர். மதுரையை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர்தான் கோவையையும் ஆட்சி புரிந்தார்.
14ம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம் கோவை வந்தது.தங்களது கீழ் வந்த பகுதிகளான கோவை, வேலூர், தஞ்சாவூர், சந்திரகிரி, மைசூர் ஆகிய பகுதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்களை நாயக்கர்கள் நியமித்தார்கள். இவர்களுக்கு பாளையக்காரர்கள் என்று பெயர்.இந்தக் காலகட்டத்தில் கோவை நகரமாக இருக்கவில்லை. 3000 பேர் மட்டுமே வசித்து சிறிய கிராமமமாகத்தான் இருந்தது.
1760களில் மைசூர் ஆட்சியை ஹைதர் அலி கைப்பற்றினார். அவரது நிர்வாகத்தின் கீழ் கோவை பிராந்தியமும் வந்தது. ஹைதர் அலி இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து கடுமையாக போராடினார்.மைசூர் சமஸ்தானத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே கடும் போர் நடந்தது. திப்பு சுல்தானின் மரணத்தோடு இந்தப் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கோவையை சென்னை மாகாணத்தோடு ஆங்கிலேயர்கள் இணைத்தனர்.1804ம் ஆண்டு கோவையை தலைநகரமாகக் கொண்டு புதிய கோவை மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். 1848ம் ஆண்டு கோவை நகருக்கு நகராட்சி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.முதல் நகராட்சித் தலைவராக சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் பதவியேற்றார். இப்படியாக நகரமாக உருவெடுத்த கோவை, மாநகரமாக அதாவது மாநகராட்சியாக 1979ம் ஆண்டு அந்தஸ்து உயரப் பெற்றது. அருகாமையில் இருந்த சிங்காநல்லூர் நகராட்சி அப்போது கோவை நகராட்சியுடன் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
கோவை சுற்றுலா:
சுற்றுலா குறித்த தகவல்களுக்கு அணுக:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.டாக்டர் நஞ்சப்பா சாலை, கோவை - 641 018.தொலைபேசி: 0422- 236311, 236324.
சுற்றுலா தலங்கள்:தாவரவியல் பூங்கா, ஊட்டி.முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.டாப் ஸ்லிப்.பரம்பிக்குளம் - ஆழியார். ஆணைமலை வன விலங்குகள் சரணாலயம். சிறுவாணி நீர் வீழ்ச்சி. பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்.
கோவில்கள்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் (கோவையிலிருந்து 7 கி.மீ). மருதமலை முருகன் கோவில் (12 கி.மீ). ஈச்சநாரி தண்டுமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில்.பூண்டி அருள்மிகு கோணியம்மன் கோவில். அவிநாசி சாலை இஸ்கான் கோவில். பொள்ளாச்சி மெயின்ரோடு மகாலட்சுமி கோவில். வெள்ளிங்கிரி மலை அடிவாரம் ஈஷா தியான மையம். தென்திருமலை ஸ்ரீவெங்கடசலாபதி கோவில்.
பிற இடங்கள்:
தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்). மேட்டுப்பாளையம்: பிளாக் தண்டர் தீம் பூங்கா. வனவியல் கல்லூரி அருங்காட்சியகம். ஜி.டி.நாயுடு தொழில் பூங்கா. டாப் ஸ்லிப், மூணார், ஆசனூர், ஊட்டி, குன்னூர்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ்: அதி வேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நரேன் கார்த்திகேயனைக் கொடுத்த ஊர் கோவை. இங்கு கார்ப் பந்தயங்களும் புகழ் பெற்றவை.கார் பந்தயம், மோட்டார் பந்தயம், கோ கார்ட் பந்தயம் ஆகியைவ கரியப்பா மோட்டார் ஸ்பீட்வே என்ற திடலில் நடத்தப்படுகிறது.கிளப்புகள்: காஸ்மோபாலிடன் கிளப், இங்கிலீஷ் கிளப், ஃபிளையிங் கிளப்.
முக்கிய அமைப்புகள்:தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா), கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம் (கொடீஸியா), தென்னிந்திய ஜவுளி ஆய்வு கழகம் (சிட்ரா), தென்னிந்திய சோதனை மற்றும் ஆய்வு மையம் (சிதாரக்).
பிற தகவல்கள்:
தலைநகரம்: கோயம்புத்தூர்.
மக்கள் தொகை: 18,65,234 (2001 கணக்குப்படி).
கல்வியறிவு: 78 % ஆண்கள் - 81 %, பெண்கள் - 74%.
பேசும் மொழிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி, துளு, ஆங்கிலம்.
தட்பவெப்பம்: 20 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் (குளிர்காலத்தில்), 27 முதல் 36 டிகிரி செல்ஷியஸ் (கோடைகாலத்தில்).
மழைக்காலம்: மார்ச் முதல் மே வரை (தென் மேற்கு பருவ மழை), அக்டோபர் முதல் நவம்பர் வரை (வட கிழக்குப் பருவ மழை)

சேது சமுத்திரம்



நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இத்திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது என்றும், இத்திட்டம் மீனவர் உட்பட எல்லாருக்கும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து புறப்படும் கப்பல்கள் இந்தியக் கடல் வழியாக சென்று கிழக்குக் கரைத் துறைமுகங்களைச் சென்றடையும் வகையில் ஆங்கிலேயர்களால் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தயாரிக்கப்பட்டது. 1860 ல் ஆங்கிலேய கமாண்டர் டெய்லர் என்பவரால் "ராமேஸ்வரம் கப்பல் கால்வாய்' திட்டம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுப் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இத்திட்டம், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1955 இல் "சேது சமுத்திரத் திட்டமாக'ப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்திய அரசால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பல இடங்களில் பல்வேறு கால கட்டங்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுத் தற்போது தனுஷ்கோடி முனையில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையிலுள்ள ஆழம் இல்லாத கடல் பகுதியில் 23 மணல் திட்டுக்கள் அமைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் மணல் திட்டுகளுக்கு இடையில் சேது கால்வாய் தோண்டுவதற்கான இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுத் தற்போது மத்திய அரசும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி முதல் மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்தைச் சுற்றிக் கொண்டு பாக்ஜலசந்தி வழியாக வங்களா விரிகுடாக் கடல் வரை 260 கி.மீ. தூரமுள்ள நீர்வழிப் பாதையில் இத்திட்டம் அமையவுள்ளது. இதற்காக ஆதாம் பாலம் (ராமர் பாலம்) துவங்கி பாக் ஜலசந்தி கடலில் 72 கி.மீ., தூரத்திற்குக் கால்வாய் தோண்டப்படவுள்ளது.மணல் திட்டுகளில் தோண்டி எடுக்கப்படும் மணலில் 10 சதவீதமான 8 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியில் கொட்டப்படும். இதனால் இப்பகுதியின் நிலப்பகுதி உயர்ந்து கடல் அரிப்பில் இருந்து தனுஷ்கோடி பாதுகாக்கப்படும். 300 மீட்டர் அகலத்திலும், 10.7 மீட்டர் ஆழத்திலும் தோண்டவிருக்கும் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.4 ஆண்டு கால அளவிற்குள் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் வருடத்திற்கு ரூ. 87.42 கோடி வருவாய் கிடைக்கும். 254 முதல் 424 கடல் மைல்கள் பயண தூரம் குறைவதால் 21 முதல் 36 மணி நேரம் பயண நேரமும் குறைகிறது. கப்பல்களுக்கு எரிபொருளும் மிச்சமாகிறது. சேது கால்வாய் தோண்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட மார்க்கத்தில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தீவுகளுக்கு இத்திட்டத்தினால் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்று தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது.மன்னார் வளைகுடாத் தீவுகளில் இருந்து 20 கி.மீ., தூரத்திற்கு அப்பால் கடல் வழிப் பாதை அமைவதால் இத்திட்டத்தினால் அரிதான கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இதனை ஆதாம் பாலப் பகுதிகளைப் பார்வையிட்ட தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக துணை சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் திட்டப் பொறியாளர்கள் சேஷாத்திரி, ராமமூர்த்தி ஆகியோர் கூறினர்.சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகம் தலைசிறந்த வர்த்தகத் துறைமுகமாக மாறும். இத்துடன், இந்தியத் துறைமுகங்களுக்கு இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்தும் எளிதாகி விடும். உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைவதால் நாட்டிலுள்ள சிறிய, பெரிய துறைமுகங்களில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்குவதன் மூலம் சுற்றுலாத் தொழில் மேம்படும். கடல் வாணிபம் பெருகும்.கடல் எல்லைப் பிரச்னையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் இருந்து இக்கால்வாய் வழியாக மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று இலங்கைக் கடற்படையினரின் தொல்லையின்றி மீன் பிடிக்கலாம்.இலங்கைக்குக் கொடுக்க வேண்டிய அன்னியச் செலாவணி மிச்சமாகும். ரயில் மற்றும் தரை வழி மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மங்களூர் நகரங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மின்னணு நிலையம் போன்ற தொழிற்சாலைகள் உருவாகும்.கொடூரமான புயல் தாக்கி கடலுக்குள் புதைந்து போன தனுஷ்கோடி இத்திட்டத்தால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.1964 &ல் வீசிய கோரப் புயல், ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தீவான தனுஷ்கோடியை நிர்மூலமாக்கியது. கட்டடங்கள் கடலுக்குள் புதைந்து போக, ஆங்காங்கே திட்டுக்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. கிழக்குக் கடற்கரையின் அழகிய தீவான தனுஷ்கோடி மீண்டும் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு சேது சமுத்திரத் திட்டத்தால் உருவாகி இருக்கிறது.ரூ. 2,000 கோடி மதிப்பீட்டிலான சேது சமுத்திரத் திட்டத்தில் தனுஷ்கோடியை அடுத்த ஆதம்ஸ் பாலப்பகுதியில் 20 கி.மீ., நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்படுகிறது. இதில் கிடைக்கும் களிமண்ணை, தனுஷ்கோடியில் கொட்டி 1,882 ஏக்கர் பரப்பளவு நிலம் சோலைவனமாக மாற்றப்படுகிறது.பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்ணைக் கொட்டி மீண்டும் மாநில அரசிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி கேட்டுத் தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதி இருக்கிறது இத்திட்டத்தை நிறைவேற்றும் அமைப்பான தூத்துக்குடி துறைமுக சபை. சேது கால்வாய்க்காகத் தோண்டப்படும் மணல், மண், கல் ஆகியவற்றில், ஒரு கோடி கனமீட்டர் அளவு களிமண் தனுஷ்கோடியில் கொட்டப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தற்போது நல்ல சாலை வசதி உள்ளது. அங்கிருந்து தனுஷ்கோடி வரை எஞ்சிய 4 கி.மீ., சாலை, மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வாடகை ஜீப்புகள் மூலமாகச் சென்று வருகின்றனர். இரு கரைகளும் வலுப்படுத்தப்பட்டு இந்தச் சாலை மேம்படுத்தப்படும்.மீனவர் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், ராமேஸ்வரம் தனுஷ்கோடி பகுதிக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு புதிய திட்டங்கள் சேதுசமுத்திரத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இதன்படி, தனுஷ்கோடியில் மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கப்படுகிறது. அத்துடன் சிறிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகமும், கப்பல்களைப் பழுதுபார்க்கும் கூடமும் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களில் மாநில அரசின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.சேதுசமுத்திரத்திட்டத்துக்கான பிரம்மாண்டமான நிர்வாக அலுவலகம் ரூ. 2 கோடி செலவில் தனுஷ்கோடியில் அமைகிறது. ரேடார் கருவிகளின் வசதியோடு கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தானியங்கி வசதி ரூ. 20 கோடியில் ஏற்படுத்தப்படும்.மேலும், மரங்கள், செடிகள், புல் தரைகள், காய்கறிகள் எனப் பசுமையான சுற்றுச் சுழலை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.மொத்தத்தில் புதிய துறைமுகங்கள், நவீன வசதிகள், நிலவள மேம்பாடு என தனுஷ்கோடியின் வளர்ச்சிக்கு ரூ. 250 கோடி வரை செலவிடப்படும். இது தமிழக அரசுக்கு நேரடியாகக் கிடைக்கிற பரிசு, மேலும் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம் இது என்கிறார் கப்பல் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு. பூம்புகாரைப் போல தனுஷ்கோடியையும் மீட்க வேண்டும் என்பது திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பம் என்கிறார் அவர்.வளப்படுத்தப்படும் 1,882 ஏக்கர் நிலத்தில், அழகான தனுஷ்கோடித் தீவை, சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக, சொர்க்க பூமியாக மாற்ற முடியும். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அப்பகுதியில் பொருளாதார வளம் மேம்படும் வாய்ப்புள்ளது.

ராமேஸ்வரம்

ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ., துõரத்தில் உள்ளது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது. 22 தீர்த்தங்கள் உள்ளன. அக்னிதீர்த்த கடலில் தீர்த்தமாடும் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர். சுவாமி சன்னதியில் தினம்அதிகாலை 5.10 மணி ஸ்படிகலிங்க அபிஷேகம் முக்கியமானது. தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.7 கட்டணம். சுவாமி சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.25, அம்பாள் சன்னதி சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.10, ஸ்படிக லிங்க தரிசனம் ரூ.15, சுவாமி சன்னதி மேடையில் அமர்ந்து தரிசனம் செசய்ய ரூ.50, கங்காபிஷேகம் செய்ய ரூ.30, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ20,பஞ் சாமிர்த அபிஷேகம் செய்ய ரூ 750. ருத்ராபிஷேகம் செய்ய ரூ.900, 108 சங்காபிஷேகம் செய்ய ரூ 1000,108 கலச அபிஷேகம் செய்ய ரூ.1000, 1008 சங்காபிஷேகம் அல்லது கலச அபிஷேகம் செய்ய ரூ 5,000 கட்டணமாகும்.திறக்கும் நேரம்: காலை 5.30 பகல் 1 மணி, மாலை 4.30 இரவு 9 மணி..

Sunday, July 8, 2007

துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்

எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும்.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.

வரலாறு

எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.

பாரதியின் பிறப்பிடம்

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும்தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.

எட்டப்பன் அரண்மனை

எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

ஊராண்மை

எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும். தமிழ் நாடு சட்டப் பேரவையில் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்டது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். எட்டயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எட்டயபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மக்கள் தொழில்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.

நெசவுத் தொழில்

கைத்தறி நெசவுஇங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது National Institute of Fashion Technology நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பெட்டித் தொழில்

நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை

எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்தொடர்ச்சியான வறட்சி
மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.

சுற்றுலா

வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு இரயில் மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.

இவ்வூரில் காணத்தக்க இடங்கள்

1. பாரதி நினைவு மணி மண்டபம்
2. பாரதி பிறந்த வீடு
3. முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்
4. உமறுப் புலவர் தர்கா
5. எட்டப்பன் அரண்மனை

அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்

1. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
3. சங்கரன் கோவில்
4. குற்றாலம் நீர்வீழ்ச்சிகள்
5. திருச்செந்தூர் முருகன் கோவில்
குற்றாலம்

அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகம் தவிர உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். இயற்கை வளமிக்க தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்றவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இதில் குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மும்பையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலையில் பொழிகிறது. குற்றாலம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை அருவிகளும், இலவசமாய் வித்தை காட்டும் மந்திக் கூட்டங்களும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் வெண்பஞ்சு மேகங்களும்தான். குற்றாலம் மலையிலிருந்து கிளம்பிப் புறப்படும் பூங்காற்று உடலுக்கு இதம் அளிப்பதோடு, நோயாளிகள் குணம் பெறவும் உதவுகிறது. இந்த அருவி நீரில் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி சுறுசுறுப்பையும் பூரிப்பையும் அளிக்கிறது. எந்த அருவிநீரும் இத்தகைய நன்மைகளை அளிப்பதில்லை என 1811ல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளனர். தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகொடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களை கட்டத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேனீக்கள் அதிகமாக உள்ளன. இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது. இதற்கடுத்து பேரருவி உள்ளது. இது ஆரம்ப காலத்தில் மிகவும் ஆபத்தான அருவியாக இருந்திருக்கிறது. இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் சிற்றருவி உள்ளது. ஐந்தருவி 40 அடி உயரத்திலிருந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இங்கு முருகன், சாஸ்தா கோவில்கள் உள்ளன. இன்னும் பழத்தோட்ட அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என பல அருவிகள் உள்ளன. குற்றாலத்திலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 பேர், 4 பேர் செல்லும் படகுகள் என தனித்தனியாக உள்ளன. இங்கு சிறுவர் நீந்தி விளையாட நீச்சல்குளமும், மீன்கள் காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் ஆய்வகமும் உள்ளது. குற்றாலத்திற்கு வருபவர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது உடல் உபாதை போக்கும் பலவகையான மஸாஜ்கள். மசாஜும், மத மதவென கொட்டும் தண்ணீரில் குளித்துத் திளைப்பதும், மறக்க முடியாத பேரனுபவம். நினைத்தாலே முக்தி தரும் காசி விஸ்வநாதர் போல் திருகுற்றாலநாதரும் பிரசித்தி பெற்றவர். தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் இது சித்திர சபையாகும். இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனி அகத்தியர் வழிப்பட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது. அருவிகளில் விளையாடவும், ஆண்டவனிடம் சென்று அவனது அருள் பெறவும் குற்றாலம் ஒரு சிறந்த தலம்.
எப்படிச் செல்வது

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை என தமிழகத்தின் முக்கிய ஊர்களிலிருந்து தென்காசிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவில்தான் குற்றாலம் உள்ளது. பேருந்துகள் தவிர வேன் சர்வீஸ்களும் ஏராளம். குற்றாலத்திலேயே தங்கும் வசதியும் சிறப்பாக உள்ளது. அல்லது தென்காசியிலேயே கூட தங்கியிருந்து குற்றாலத்திற்கு சென்று வரலாம்.
திருநெல்வேலி வரலாறு

தமிழ்நாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. 1790 ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் சுமார் 6,816 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாநகரம் விவசாயத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரைச் சுற்றி நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் திருநெல்வேலி என்ற பெயர் அமைந்தது.சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஏன் பிற மாநில மக்களுக்குக் கூட நினைவுக்கு வருவது நெய் மணக்கும் அல்வா தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இங்கு கிடைக்கும் சுவைமிக்க அல்வாவை உற்சாகத்துடன் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. அல்வாவுக்குப் பெயர் போன இந்த நெல்லையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

பொதுத் தகவல்கள்:பரப்பளவு 87.64 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை சுமார் 4 லட்சம்
வெப்பநிலை கோடை காலத்தில் சராசரி அதிகபட்சம் 34.8டிகிரி சென்டிகிரேட்
குளிர்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 21.6டிகிரி சென்டிகிரேட் மொழிகள் தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு, மற்றும் செளராஷ்டிரா எஸ்.டி.டி.கோட் எண் 0462

முக்கிய இடங்கள்

தாமிரபரணி ஆறு:நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.

காந்திமதி நெல்லையப்பர் கோவில்:நெல்லையின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதுதான் காந்திமதி நெல்லையப்பர் கோவில். விழாக் காலங்களில் குறிப்பாய், தசராவின்போது இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

அறிவியல் மையம்:நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை அடுத்து அமைந்துள்ளது அறிவியல் மையம். இங்கு கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனைச் சுற்றி பூங்காவும் அமைந்துள்ளது.

பாபநாசம்:நெல்லையிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம். பாபநாசம் மலையில் உள்ளது புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி. திருவிழாக் காலங்களில் தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இங்குள்ள கோவிலில், காணிக்கைகள் செலுத்தும் பக்தர்கள் ஏராளம்.கழுகுமலை:கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 அடி உயர¬ள்ள இந்தக் கழுகு மலை சுற்றுலா பயணிகளின் சுக வாசஸ்தலம். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை வேண்டிக் கொண்டால் நனைத்த காரியம் நடக்கும் என்னும் கருத்து இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

தென்காசி:நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரனாசி) என்று அழைக்கப்படும் இந் நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது. அழகு மிகுந்த சிற்பங்கள் பல, இங்குள்ள கோவில்களில் அமைந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம்:இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

மணப்பாடு:1581 ல் கட்டப்பட்ட ஹோலி கிராஸ் தேவாலயம் இந்த ஊரில்தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புதுவருடம் போன்ற விழாக்கள் சிறப்பு ஜெபங்களுடன் கொண்டாடப்படும்.

கிருஷ்ணாபுரம்:நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

குலசேகரப்பட்டினம்:இது தென்மாவட்டங்களில் தசரா பண்டிகைக்கு பெயர் பெற்ற இடம்.

குற்றாலம்:நெல்லையிலிருந்து சுமார் இரண்டுமணி நேர பஸ் பயணத்தில் குற்றாலத்தை அடைந்து விடலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீஸன் உள்ள குற்றாலத்தில் உள்ளூர் மக்களை விட நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்குள்ள தேனருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி போன்ற அருவிகள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. இங்கு விழும் அருவிகளில் மருத்துவக் குணங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு திரைப்படக் கலைஞர்கள் , மற்றும் வெளிநாட்டினர் உள்பட பொதுமக்கள் பலர் வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கு வராமல் இருப்பதில்லை. இங்குள்ள குளிர்ச்சியான சீதோஷ்ணநலை, ரம்மியமான சுற்றுப்புறச்சூழல் அனைத்து மக்களையும் கவர்ந்திழுப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

குற்றாலத்தில் உள்ள கோவில்:இங்குள்ள குற்றாலநாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தக் கோவிலில் உள்ள கற்தூண்களில் பொறிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் மூலம் நாம் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

திருச்செந்தூர்:அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சங்கரன்கோவில்:இங்குள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம்:திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

தூத்துக்குடி:நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

பத்தமடை:நெல்லையை ஒட்டியுள்ள பத்தமடை பாய் நெய்வதற்குப் பெயர் போன இடமாகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எட்டையாபுரம்:புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம்:விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

பாஞ்சாலங்குறிச்சி:17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்துகொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் இன்றும் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.

கட்டபொம்மன்கோட்டை:1974 ல் தமிழக அரசால் கட்டப்பட்டது தான் கட்டபொம்மன்கோட்டை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றிப்பார்ப்பதன் மூலம் இதன் வரலாற்று முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

Friday, June 15, 2007

த‌மிழ்நாடு ப‌ற்றி ஒரு பார்வை

தமிழ்நாடு அமைந்த இடம்
தலைநகரம் சென்னை
மிகப்பெரிய நகரம் சென்னை
ஆட்சி மொழி தமிழ்
பரப்பளவு 130,058 கி.மீ²
மக்கள் தொகை (2001)62,110,839 (6வது)
அடர்த்தி 478/கி.மீ²
மாவட்டங்கள் 30

புவியமைப்பு

ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறதுதமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலை நகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், மற்றும் திருநெல்வேலி தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

வரலாறு

"வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

20 ஆம் நூற்றாண்டு1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

அரசியல்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார்.1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார்.1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.லதமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன்,இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.

பொருளாதாரம்

தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறுஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவூட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன

தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை

தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றார்கள்.

சமூக வளர்ச்சி

சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

கல்வி அறிவு வீதம்• மொத்தம்: 73.47% • ஆண்கள்: 82.33% • பெண்கள்: 64.55%

மாவட்டங்கள்

தமிழ் நாட்டில் 30 மாவட்டங்கள் உள்ளன
  • இராமநாதபுரம் மாவட்டம்
  • ஈரோடு மாவட்டம்
  • கடலூர் மாவட்டம்
  • கரூர் மாவட்டம்
  • கன்னியாகுமரி மாவட்டம்
  • காஞ்சிபுரம் மாவட்டம்
  • கிருஷ்ணகிரி மாவட்டம்
  • கோயம்புத்தூர் மாவட்டம்
  • சிவகங்கை மாவட்டம்
  • சென்னை மாவட்டம்
  • சேலம் மாவட்டம்
  • தஞ்சாவூர் மாவட்டம்
  • தர்மபுரி மாவட்டம்
  • திண்டுக்கல் மாவட்டம்
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  • திருநெல்வேலி மாவட்டம்
  • திருவண்ணாமலை மாவட்டம்
  • திருவள்ளூர் மாவட்டம்
  • திருவாரூர் மாவட்டம்
  • தூத்துக்குடி மாவட்டம்
  • தேனி மாவட்டம்
  • நாகப்பட்டினம் மாவட்டம்
  • நாமக்கல் மாவட்டம்
  • நீலகிரி மாவட்டம்
  • புதுக்கோட்டை மாவட்டம்
  • பெரம்பலூர் மாவட்டம்
  • மதுரை மாவட்டம்
  • விருதுநகர் மாவட்டம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • வேலூர் மாவட்டம்

விழாக்கள்

பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைகப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் ஆகும்.தமிழ் மாதமான தை முதல் நாள் (ஜனவரி 14 அல்லது 15) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரசுவதி (கல்விக் கடவுள்) பூஜை, ஆயுத பூஜை, அய்யா வைகுண்ட அவதாரம், நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டஙளும் நடைபெறுகின்றன.


சுற்றுலாத்துறை

தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன.கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை தென்னக ரயில்வேயின் சென்னை-கன்னியாகுமரி தடத்தில் சென்னையிலிருந்து 496 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தொழில், சுற்றுலா, கல்வி, கலாச்சாரம் என்று தமிழின் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வெற்றி கண்டிருக்கும் இந்த மதுரை, சுற்றுலா செல்வோருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். மதுரை மண்ணை மணக்கச் செய்யும் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆரம்பித்து, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, அழகர்கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வைகை அணை என்று நகரைச் சுற்றிலும் இயற்கை வளம், ஆன்மீகம் கொழிக்கும். அதனை விடுத்து மதுரையிலிருந்து கொடைக்கானல், பழநி, இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மற்ற சிறப்புகள் வாய்ந்த இடங்களுக்கும் போக்குவரத்து வசதிகள் மிகுந்துள்ளது. 24 மணிநேர போக்குவரத்து வசதிகள் இங்கு உண்டு. தென்னக ரயில்வேயில் மதுரை ஒரு மிகமுக்கிய சந்திப்பாகும். ரயில்வே பயண நேரத்திற்கு http://www.southernrailway.org/ என்ற தளத்தை நாடவும்.இந்தியர்கள் அனைவருமே மதுரையை மீனாட்சியுடன் இணைத்தே பார்த்து வருகின்றனர். வெளிநாட்டவரும் இதற்கு விதிவிலக்கல்ல. மதுரைக்கு வருவோரது பயணம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகாமல் நிறைவு பெறுவதில்லை என்பது எனது எண்ணம். அன்னை மீனாட்சியின் புகழ் எங்கெங்கும் பரவிக்கிடப்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். இதனை அறியாதவர் யாவரும் உண்டோ ? சாதாரண கிராமத்து பெண்மணி கூட, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி என்று அவளை அறியாமல் கூறினாலும், அவளது மனதில் எவ்வளவு ஆழத்தில் அன்னை மீனாட்சி பதிந்து இருக்கிறாள் என்று அறிவது சிறப்பு.

மதுரை கோயிலின் தோற்றம் சம்பந்தப்பட்ட செய்திகள்

இந்திரன் ஒருமுறை ஒரு துர்தேவதையைக் கொன்றதற்கு பிராயச்சித்தம் செய்யும் பொருட்டு பூலோகத்திற்கு வந்தான். அப்போதைய பாண்டிய நாட்டின் கடம்ப வனத்திற்கு வந்தபோது தன் துன்பங்கள் நீங்கியதை உணர்ந்தான். உண்மையை அறியமுற்பட்ட போது, அங்குள்ள ஒரு கடம்ப மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கம்தான் தன் துன்பம் நீங்கியதற்குக் காரணம் என்பதை அறிந்தான். அதன் பக்கத்தில் ஒரு சிறு குளமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவன் சிவலிங்கத்தை வணங்கி அதற்கென ஒரு சிறிய கோவிலைக் கட்டினான். அந்த சிவலிங்கம் இன்னும் வழிபாட்டில் இருந்து வருகிறது. அதற்கு இந்திர விமானம் என்ற பெயர் கொண்டு மதுரை கோயிலில் இருந்துவருகிறது.ஒருமுறை மானவூரைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்ப வனத்தின் வழியாகச் சென்ற போது, இரவு இந்திர விமானத்தில் தங்க நேர்ந்தது. காலையில் அவன் எழுந்து பார்த்தபோது சிவலிங்கத்தை வழிபட்டதற்குரிய அடையாளங்கள் தெரிந்தது. அதனை தேவர்களின் வேலையென நினைத்த வியாபாரி மன்னன் குலசேகரபாண்டியனிடம் சென்று கூறினான். அதற்கு ஏற்றார்போல் முதல் நாள் இரவே, சிவபெருமான் பாண்டியனின் கனவில் தோன்றி குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோயிலும், அதனை மையமாகக் கொண்டு ஒரு நகரத்தையும் நிர்மாணிக்குமாறு பணித்தார். குலசேகரனும் கட்டி முடித்தான். முதன் முதலில் குலசேகர பாண்டியனால் இந்தக்கோயில் கட்டப்பட்டது என்றாலும், அந்தக்கோயிலை மிகச்சிறப்பாக மாற்றிய பெருமை நாயக்கர்களையே சாரும். நாயக்கர்கள் மதுரையை 16முதல் 18ஆம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். அதனால் தங்களது ராஜமுத்திரையின் பிரதிபளிப்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை நிர்மாணித்திருக்கிறார்கள்.

கம்பீரமான மதுரை கோயில் கோபுரங்கள் - ஒரு பார்வை

750x830 அடி பரிமாணத்தில் 25ஏக்கர் அளவில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பனிரெண்டு கோபுரங்களும் கடவுள் மற்றம் புனித தேவதைகளின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு பெரிய கோபுரங்களும் திசைக்கொன்றாக வெளிச் சுவரில் இருக்கின்றன. தெற்கு வாசலில் உள்ள இந்தக்கோபுரம்தான் மற்றவைகளைவிட பெரியது. கீழிருந்து கிட்டத்தட்ட 50 மீட்டர் (160 அடி) உயரத்தில் இருக்கறது. இந்தக்கோபுரத்தின் மீது மட்டுமே நம்மால் ஏறிப்பார்க்கமுடியும். இந்தக்கோபுரத்தின் மீதிருந்து பார்த்தால் மற்ற அனைத்து கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் (சுவாமி சன்னதிக்கு மேலிருக்கும் கோபுரம்) மிகத் தெளிவாகப் பார்க்கமுடியும்பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலில் சிவனுடன் ஒன்றிணைந்த அன்னை மீனாட்சி வீற்றுள்ளார். மீனாட்சிக்கு நான்கு, சொக்கநாதருக்கு நான்கு, சுற்றுச் சுவரில் நான்கு என இந்தக் கோயிலில் 12 கோபுரங்கள் இருக்கின்றன. வெளிச்சுற்றுச் சுவரில் இருக்கும் ஆச்சரியப்பட வைக்கும் கோபுரங்களே மதுரையின் சிறப்பு. வெளிச்சுவற்றில் உள்ள கோபுரங்களின் அமைப்பின் பரிமாணங்கள் கீழ் வருமாறு.கிழக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 161'3". 1011 சிற்பங்கள்தெற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 170'6". 1511 சிற்பங்கள்மேற்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 163'3". 1124 சிற்பங்கள்வடக்கு கோபுரம் (ஒன்பது தளங்கள்) 160'6". மற்ற கோபுரங்களை விட குறைவான சிற்பங்கள்இந்த நான்கு சுற்றுச்சுவர் கோபுரங்களை விடுத்து, மேலும் நான்கு சிறிய கோபுரங்கள் இந்த இரண்டு ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வேலைப்பாடுகள் முடிக்கப்படாமல் உள்ள கிழக்கு வாசல் ராஜகோபுரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் இருக்கிறது (174 சதுர அடி) இதன் வேலை முடிக்கப்பட்டால் இந்தக் கோயில் இந்தியாவின் மிகச்சிறந்த கோயில்களுள் ஒன்றாகிவிடும். வருத்தத்தைத் தரும் வகையில் இது முடிவு பெறாமல் இருக்கிறது.

நீங்கள் இந்த ஐந்து வழிகளில் ஏதேனும் ஒன்று வழியாக உள்ளே வரலாம். பெரும்பாலும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கிற கிழக்கு வாசல்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. கோவிலின் மூலாதாரமான மீனாட்சி வீற்றிருக்கும் திசையை அதிகம் விரும்புவதில் ஏதும் வியப்பில்லையே. இந்த ஒரு வாயில் மட்டுமே கோபுரம் முடிவு பெறாமல் இருக்கிறது. இதன் பெரிய வடிவமும், பரிமாணங்களும் சிதம்பரம் கோயிலை ஒத்திருக்கிறது. இங்கு இன்னும் வெளியிடப்படாத சில கல்வெட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோபுரத்தின் கீழ் மதுரையின் காவல் தெய்வம் மதுரைவீரன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இவருக்கு அருகில் பதினெட்டாம் படி இருக்கின்றது. இங்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சத்தியப் பிரமாணம் பெறப்படுவதாகவும், இங்கு பொய்சொன்னால், அவருக்கு உடனடி தண்டனையாக மரணம் ஏற்படுவதாக கிராமத்து பேச்சு வழக்குகள் தெரிவிக்கின்றன.

தமிழ் கலாச்சாரத்திற்கு கோயிலின் பங்களிப்பு

இறை வழிபாடு என்பதில் மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் ஆற்றியுள்ள பங்கு அளவிட முடியாதது. தமிழின் கூடாரமாக மீனாட்சிஅம்மன் கோயில் இருந்திருக்கிறது. இந்தக்கோயிலின் திருவிழாக்கள் அருகாமையில் இருக்கின்ற கிராமத்து மக்கள் எல்லாம் ஒன்று கூடி கொண்டாடப்படுவதாக உள்ளது. இவ்வாறு மண்ணின் மணத்தை விட்டுவிடாமல் பாதுகாப்பதிலும் மீனாட்சி அம்மன் கோயிலின் பங்கு குறிப்பிடக்கூடியது. கலைஞர்கள், ஓவியர்கள், கட்டிட நிர்மாணிகள், இசைஞர்கள், பாகவதர்கள் ஆகியோருக்கு புகலிடமாகவும், அந்தக்காலத்தைப் போலவே, தற்காலத்திலும் அந்த நுண்கலைகளின் வளர்ச்சியில் இந்தக் கோயில் பெரும் பங்கு வகிக்கிறது.பழங்காலத்தில் இக்கோயிலின் கோபுரங்களை கணக்கில் கொண்டு 'நான்மாடக்கூடல்' (நான்கு கோபுரங்களின் ஒருங்கிணைப்பு) என்று அழைக்கப்பட்டது. சிவனே மதுரை என்ற பெயர் வைத்ததாகக் கூட மக்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தக் கோயிலின் கட்டுமானம் பலகாலங்களில் பல பாணியில் முடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள வனப்பு மிக்க கட்டிடக்கலை 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்டது. எனவே திராவிடக் கலைப்பாணிக்கு சக்தி மிகுந்த சாட்சியாக இந்தக் கோயில் திகழ்கிறது. திராவிடக் கலைப்பாணியின் அனைத்து அம்சங்களும் இந்தக் கோயிலில் இருக்கிறது. இந்தக் கோயிலை முதன் முதலில் பார்க்கும் போது சற்று குழப்பமும், சில சமயங்களில் தலை சுற்றலும் ஏற்படுவது இயற்கை. ஆனால் மிகச் சிறந்த கலைக்கூடமாக இந்தக் கோயில் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள உங்களது அடுத்தடுத்த பயணங்கள் கண்டிப்பாக உதவும். முதன் முறையே எல்லா படைப்புகளும் அங்கீகரிக்கப்படுவதில்லையே. பாரதியின் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்ற பாடலுக்கே அவரது காலத்தில் மூன்றாம் பரிசுதானே கிடைத்தது.அதே போல இக்கோயில் உட்பட்ட தென்னிந்தியக்கோயிலுக்கு இந்தியர்களால் தக்க மதிப்பு அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. கட்டிடக்கலை என்பதை மட்டுமே மனதில் கொண்டு விமர்சித்தால் அது நன்மை அளிக்கும். வடஇந்தியக் கட்டடக்கலை என்பதை ஒரு தராசாக வைத்து தென்னிந்தியக் கட்டடக்கலையை விமர்சித்தால் அது எப்படி ஒரு ஆரோக்கியமான கருத்தாக அமையும்? கோயிற்கட்டிடக்கலை பயில விரும்பி வரும் வெளிநாட்டவர்கள், தென்னிந்தியக் கோயிலின் எரியும் கற்பூரம், திருநீறு, கோவிலில் வீசும் மெல்லிய பூ மற்றும் சந்தனத்தின் மணம் சுற்றிலும் உயர்ந்திருக்கும் கோபுரங்கள் அவர்களது ஆர்வத்தை அதிகரிக்கும்.

பொற்றாமரைக்குளம்

அந்த மண்படத்தைக் கடந்து தற்போது புனித பொற்றாமரைக் குளத்தை அடைந்திருக்கிறோம். தெற்கு வாசல் பக்தர்களை நேரடியாக பொற்றாமரைக்குளத்திற்கு அழைத்து வருகிறது. அந்த நடைபாதையிலிருந்து படிகள் இறக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அந்தப் படிகள் உதவுகின்றன. இந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்கள் நிறைந்த நடைபாதை உள்ளது. பொற்றாமரைக்குளம், மதுரை கோயில் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. எவ்வளவு புனிதமானதோ அவ்வளவு புனிதமானது. 40x60 மீட்டர்கள் அளவில் அமைந்துள்ள இந்தக்குளம் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது என்பது சரித்திரப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்கப் புலவர்களின் புகலிடமாகவும் அவர்கள் ஆலோசனை செய்யும் தமிழ் கூடாரமாகவும் விளங்கியது. புலவர்கள் எழுதிய கவிதைகளை இந்தக் குளத்தில் மிதக்கவிட்டு, அதில் மிதந்து வரும் கவிதைகளே தரமான கவிதைகள் என்று ஏற்றதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் இறைவன் தமிழ் மீது மையல் கொண்டு புலவர்களுடன் வாதம் செய்த இடமாகவும் மீனாட்சி அம்மன் கோயிலையே குறிப்பிடுகின்றனர். இந்திரனின் பூலோக வருகையின் போது இந்தக் குளம் அவனுக்கு தாமரைகளைக் கொடுத்ததாக வரலாறு உள்ளது. தற்போது இந்தக் குளத்திற்குள் தாமரைகள் இல்லை. அதற்கும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் இந்தக் குளத்தின் அருகில் ஒரு கொக்கு தவம் புரிந்து வந்தது. அப்போது இக்குளத்தில் உள்ள மீன்கள் அதனிடம் குறும்பு செய்தன. அந்தக் கொக்கு அதனை சட்டை செய்யவில்லை. ஆனால் அது முக்தி அடையும்போது இறைவனிடம் "இந்தக்குளத்தில் எந்த உயிரினமும் இருக்கக் கூடாது " என்று வரம் வாங்கிவிட்டதாக அந்தக் கதை கூறுகிறது.இதனைச் சுற்றியுள்ள சுவர்களில் Fresco வகை மனதை மயக்கும் ஓவியங்கள் மீனாட்சியின் வாழ்க்கைச் சிறப்பபை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. இந்தக் குளத்திலிருந்து கோபுரங்களின் காட்சி மிக அழகாக இருப்பதை உணர்கிறீர்கள். பிராமணர்கள் மாலை வேலைகளில் இந்தக் குளத்தில் மந்திரங்கள் ஓதுவதும், சமஸ்கிருத வகுப்பு நடப்பதையும் காணலாம். இந்தக் குளத்தில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது. மதுரை பேரரசின் புகழ்பெற்ற அரசி மங்கம்மாள் கட்டியதாகக் கூறுகிறார்கள். ராணி மங்கம்மாள் நாயக்கர் குல ராணி ஆவார். குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள்.

மதுரை நகர வழக்கங்கள்

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.அதே போல் குடைகளையும் பொதுவாக வயதானோர் மட்டுமே வெயிலுக்கு பயன்படுத்துகிறார்கள். மழை சாதாரணமாக 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பெய்வதில்லை, அதுவும் சில நாட்கள் மட்டும். மதுரை மக்களுக்கு மழை என்பது ஒதுங்கி நிற்கும் தருணம். ரெயின் கோட், ரப்பர் சூ, குடைகள் போன்றவை பள்ளிச் சிறார்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

மதுரை நகரின் அமைப்பு:

நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும், தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக விரிவடைந்து கொண்டே வரும் வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான். கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று சதுர வீதிகளுக்குப் பின் 'வெளி வீதி'கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள் நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன.

மதுரையில் பார்க்க வேண்டியவை...

கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை. மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுதவிர, வண்டியூர் மாரியம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றத்தில் ¬முருகனின் ¬முதல் படை வீடு, அழகர் கோவில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ளன.மதுரை நகரில் உள்ள ¬முக்கிய சுற்றுலா ஸ்தலங்களாக, திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் ஆகியவை உள்ளன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழனி, கொடைக்கானல் ஆகிய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன.மீனாட்சி கோவில்மதுரை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவில். பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீனாட்சி கோவில். குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் ¬முடிவுற்றது.மதுரை நகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மீனாட்சி கோவில் நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது. கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள நான்கு வெளி வீதிகள்தான் நகரின் அன்றைய எல்லையாக இருந்தது. தென்னிந்தியாவின் பழம்பெரும் புராதனக் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழர்களின் கலாசாரம், இலக்கியம், இசை, நடனம் என பல்துறைகளின் பெருமையை விளக்கும் மையமாக இது நின்று கொண்டுள்ளது.மூன்றாவது மற்றும் இறுதித் தமிழ்ச் சங்கம் மதுரையில் கூடியபோது, இலக்கிய சுவடிகளையெல்லாம் கோவில் குளத்தில் போட்டு விடுவது என்று ¬முடிவு செய்யப்பட்டது. அப்போது, நல்ல புத்தகங்கள் மட்டும் மூழ்காமல் இறைவனின் சக்தி தடுத்தது. தரம் குறைந்த புத்தகங்கள் குளத்தில் மூழ்கும்படியும் அது செய்தது. ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்துக் கட்டப்பட்டது மீனாட்சி அம்மன் கோவில். ஒவ்வொரு மன்னர்களின் காலகட்டத்திலும் அவர்களது விருப்பத்திற்கேற்ப வளர்ந்த இக்கோவில் 65,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது.

மீனாட்சி யார்? மலையத்துவாஜ பாண்டிய மன்னனின் மகள்தான் மீனாட்சி. மலையத்துவாஜ பாண்டியனுக்குக் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடவுள் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அதைத் தத்தெடுத்துக் கொண்டார் பாண்டியன். ஆனால் குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. இதனால் மன்னன் கவலையுற்றான். ஆனால் தன் மனம் கவர்ந்தவனைக் காணும்போது, மூன்றாவது மார்பகம் மறையும் என்று அசரிக் குரல் மன்னனை ஆறுதல் படுத்தியது.மீனாட்சி சிறந்த வீராங்கனையாக வளர்ந்தார். திருக்கயிலாயத்தில் ஒரு போரில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமானின் தரிசனம் கிட்டியது. அவரது அழகில் மெய் மறந்தார் மீனாட்சி. அப்போது அவரது மூன்றாவது மார்பகம் மறைந்தது. இதையடுத்து சிவ பெருமானையே மணந்து கொண்டு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் என்ற கோலத்தில் மதுரைக்கு வந்தார். அப்போதுதான் மீனாட்சி, வேறு யாருமல்ல, பார்வதியின் மறு உருவம் என்பது அனைவருக்கும் விளங்கியது. தெய்வ மகளான மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனுக்கும் மதுரையில் கோவில் கட்டப்பட்டது. அதுதான் மீனாட்சி அம்மன் கோவில்.மொத்தம் 12 கோபுரங்களைக் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில். இதில் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.பழமையான கோபுரம் 13-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம். சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ளது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னன் இக்கோபுரத்தைக் கட்டினார்.மீனாட்சி கோவிலில் இடம் பெற்றுள்ள அஷ்ட சக்தி மண்டபம், திருமலை நாயக்கரின் இரு மனைவிகளால் கட்டப்பட்டது. இதற்கு அடுத்து உள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம்.கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக நுழைந்தால் தென்படுவது பொற்றாமறைக் குளம். இக்குளத்தின் நடுவில் தங்கத் தாமரை மிதக்க விடப்பட்டிருந்ததால் இப்பெயர் வந்தது. இங்குதான் தமிழ்ச் சங்கம் இயங்கியது.தொடர்ந்து உள்ளே சென்றால் ¬தலில் வருவது அம்மன் சன்னதி. அடுத்து வருவது சுந்தரேஸ்வரர் சன்னதி. அம்மன் சன்னதிக்கு முன்பாக, ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும்.

கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கே அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் சன்னதி. வழியில் நாம் பார்ப்பது பிரமாண்டமான பிள்ளையார் சிலை. இது ¬முக்குறுணிப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது. கோவில் கட்டும் போது, மண்ணுக்காக வண்டியூரில், பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். அப்போது அங்கு இந்த பிள்ளையார் கிடைத்தார்.புது மண்டபம்:கிழக்கு கோபுரத்திற்கும், ¬முடிவு பெறாத நிலையில் உள்ள ராஜகோபுரத்திற்கும் இடையில் உள்ளது இந்த மண்டபம். இதற்கு வசந்த மண்டபம் என்றும் பெயர். திருமலை நாயக்கர் கட்டியது இது. அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது இந்த மண்டபம்.கோவில் அருங்காட்சியகம்:மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் கோவிலில் உள்ள கட்டடக் கலை குறித்து விளக்கப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அக்கால கட்டடக் கலை மறைந்துள்ளது. தூண்கள் அமைந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் அழகு குலையாமல் உயிரோட்டத்துடன் உள்ளன. ஒரு கோணத்தில் நின்று பார்த்தால், அத்தனை தூண்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். அக்காலத்திய கட்டடக் கலையின் சிறப்பை விளக்குவதாக இது உள்ளது.மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்களில் சிலவற்றைத் தட்டினால் இசை வரும். ஒவ்வொரு தூணும் ஒரு இசையைத் தரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.காலை 6 மணி ¬தல் இரவு 8மணி வரை காட்சியகம் திறந்திருக்கும்.

அழகர் கோவில்

மதுரை நகரிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் அழகர் கோவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இக்கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள், கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார்.அழகர் மலையின் தெற்குப் பகுதியில் அழகர் கோவில் கோவில் உள்ளது. மலை மீது 4 கிலோ மீட்டர் தொலைவில்,¬முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழ¬முதிர் சோலை அமைந்துள்ளது. இங்குள்ள நூபுரகங்கை எனும் ஊற்றிலிருந்து, பக்தர்கள் தீர்த்த நீராடிச் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்

மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், வண்டியூரில் அமைந்துள்ளது இக்கோவில். மீனாட்சி கோவில் கட்டும் போது, இக்கோவில் அருகே, பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். இங்கிருந்துதான் மீனாட்சி கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான மண் அள்ளப்பட்டது.இந்தத் தெப்பக்குள மைய மண்டபத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்ததாக ஒரு செய்தி உண்டு. ஆண்டு தோறும் தை மாதத்தில் இங்கு தெப்பத் திருவிழா நடத்தப்படும்.

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட சிறப்பான கட்டடங்களுள் இதுவும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது உள்ள மஹால், அப்போது திருமலை மன்னர் வாழ்ந்த பகுதியின் ஒரு பகுதியே. பல பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. சொர்க்கவிலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது மஹால்.மஹாலில், ¬தலில் நுழைந்ததும் தென்படுவது, அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். நவராத்திரி விழா, சித்திரைத் திருவிழா, மாசி விழா, தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து, அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார்.தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இப்போது, மஹால் உள்ளது. தினசரி காலை 9 மணி ¬தல் மாலை 5 மணி வரை மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி, ஒளிக் காட்சியும் இங்கு உண்டு. திருமலை நாயக்கர் வரலாறு, கண்ணகி வரலாறு இதில் இடம் பெறும்.

காந்தி மியூசியம்

தேசப் பிதா மகாத்மா காந்திக்கு நாட்டின் சில பகுதிகளில் நினைவு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு ¬முடிவு செய்தபோது, தேர்வு செய்யப்பட்ட ஒரு நகரம் மதுரை. மகாத்மா காந்தி, ¬முழு ஆடை துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறியது, இந்த மதுரையில்தான்.காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்டுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை தவிர நல்ல நூலக¬ம் உள்ளது.காந்தியின் நினைவைப் போற்றுவோருக்கு சிறந்த வரப்பிரசாதம் இந்த அருங்காட்சியகம்.

கோவலன் பொட்டல்

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். கி.¬ 300 மற்றும கி.பி. 300 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமான சங்க காலத்தில் இருந்து இடுகாடுகளை இங்கு காணலாம்.

திருப்பரங்குன்றம்
மதுரைக்குத் தெற்கே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, ¬முருகனின் இரண்டாவது படை வீடான திருப்பரங்குன்றம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவிலில் ¬முருகன் குடி கொண்டுள்ளார். அசுரனான சூரபத்மனை வதம் செய்த ¬முருகன், இந்திரனின் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு இங்கு குடிபுகுந்தார். கோவிலின் நுழைவாயிலில் 48 தூண்கள் அமைந்த, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் உள்ளது.

விரகனூர்: மதரை நகருக்குள் இருக்கும் சிறிய அணைக் கட்டு. வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.வைகை அணை: மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது. சிறந்த சுற்றுலாஸ்தலமாகும்.

தேக்கடி: மதுரை மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம் காண்பவர் மனதுக்கு இதம் தரக் கூடியதாக உள்ளது. அழகான ஏரியும், அவ்வப்போது வந்து செல்லும் யானைக் கூட்டம் மற்றும் பிற விலங்குகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். மதுரையிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தேக்கடி உள்ளது.

கொடைக்கானல்: மதுரை மாவட்டத்தில் ¬முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் (7000 அடி உயரம்). மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு ¬முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.

பழனி: 122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தமிழ்க் கடவுள் ¬முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. தமிழகத்தின் திருப்பதி என்று சொல்லக் கூடிய அளவுக்கு நல்ல வருவாய் உள்ளது பழனி தண்டாயுதாபாணி கோவில். விஞ்ச் மூலம் கோவிலுக்குச் செல்லும் வசதி உள்ளது. பஞ்சாமிர்தம், விபூதிக்குப் பெயர் போனது பழனி. மதுரைக்கு அருகிலுள்ள மு¬க்கிய புனிதத்தலம்.

பிற இடங்கள்: மதுரையில் உள்ள மற்ற பிரபல இடங்களில் மங்கம்மாள் சத்திரம், தமிழன்னை சிலை, த¬க்கம் மைதானம் ஆகியவை ¬முக்கியமானவை. காந்தி மியூசியம் அமைந்துள்ள கட்டடம், ராணி மங்கம்மாளினால் கட்டப்பட்டது. இங்குதான் காந்தி மியூசியம், நூலகம், மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

மதுரையின் வரலாறு...

மதுரை வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டடங்கள், மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள், வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம், ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது.வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு ¬முன்பு உருவானது மதுரை. ¬முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை. கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம். ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.மெகஸ்தனீஸ் (கி.¬. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். தங்களது பயணக்குறிப்புகளில் மதுரை குறித்துக் கூறியுள்ளனர். மார்க்கோ போலோ கி.பி. 1293-ம் ஆண்டு மதுரை வந்துள்ளார்.வரலாறு: தனஞ்செயன் என்ற விவசாயி ஒரு¬றை வனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும், கடவுள்களின் கடவுளான இந்திரன் அதை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த செய்தியை, மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட மன்னர், சுயும்பு லிங்கத்தை மையமாக வைத்துக் கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் உத்தரவிட்டார்.நகர¬ம் உருவானது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மன்னர் உள்பட அனைவரும் யோசித்தனர். அப்போது, சிவன் அங்கு தோன்றி, தனது தலை ¬முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவினார். இதையடுத்து புதிய நகருக்கு மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்ற பொருளில் இப் பெயர் வந்தது.மதுரை நகரம் பலமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது. சிவன் தனது 64 திருவிளையாடல்களை இந்த புராதன நகரில்தான் நிகழ்த்தினார்.

சோழ மன்னர்கள் கி.பி. 10-வது நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையைக் கைப்பற்றும் வரை மதுரை மாநகரம் சொர்க்க பூமியாக இருந்தது. பாண்டிய மன்னர்களின் காலமே, மதுரையின் பொற்காலமாக கூறப்படுகிறது. 13-வது நூற்றாண்டின் துவக்கம் வரை மதுரை, சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்களிடமிருந்து கி.பி. 1223-ம் ஆண்டில் மதுரையை, பாண்டியர்கள் மீட்டனர். மறுபடியும், மதுரை மலர்ச்சி கண்டது.பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் மொழி பெரும் வளர்ச்சி கண்டது. கணவன் கொலை செய்யப்பட்டதும், ஆவேசமடைந்து மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றுக் காதையான, சிலப்பதிகாரத்தின் கதைக் கரு மதுரையை மையமாகக் கொண்டது. வேறு பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளும் மதுரை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. 1311-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி பாதுஷா, அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், மதுரை மீது படையெடுத்தார். மதுரை நகரிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பிற பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.மாலிக்காபூர் படையெடுப்பிற்குப் பிறகு வேறு சில ¬கம்மதிய மன்னர்களும் மதுரையை பல்வேறு கட்டங்களில் ஆக்கிரமித்துள்ளனர். 1323-ல் துக்ளக் மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது, தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை இருந்தது.1371-ல் ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகர மன்னர்கள் மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். இதையடுத்து விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை மாறியது. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் பழக்கம். எனவே மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு, 1530-ல் நாயக்கர்கள் தனி அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத் துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் மிகப் பிரபலமானவர். மக்களிடம் அதிக நற்பெயரைப் பெற்றவர். மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம், புது மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், மஹால் அரண்மனை ஆகியவை அவர் கட்டியவை.1781-ல் மதுரை, ஆங்கிலேய, கிழக்கிந்திய கம்பெனியரின் கைக்கு மாறியது. மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார். இவரே, மதுரையின் ¬முதல் ஆட்சியர் ஆவார்.ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்தும், இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக விளங்கி வருகிறது.மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவப்ைபுதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் மதுரையின் மிச்சங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவப்ைபுகளின் பட்டியலில் மதுரையும் உள்ளது, மதுரை மக்களுக்குப் பெருமை அளிப்பதாகும்.சுதந்திரத்திற்குப் பிறகு மதுரை, தமிழகத்தின் ¬முக்கிய மாவட்டமாக மாறியது. இன்று சென்னைக்குப் பிறகு ¬முக்கிய நகராக மதுரை உள்ளது. பாரம்பரிய¬ம், புராதன வரலாறும், செறிவான கலாச்சாரப் பின்னணியுமே, இந்தப் பெருமையை மதுரைக்குக் கொடுத்துள்ளது.இன்றைய மதுரை: இன்றைய மதுரையின் உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னைக்குப் பிறகு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நகரம் மதுரைதான். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரைக்கு தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும்.

22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக மதுரை நகரம் உள்ளது. நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் மிகவும் பழமையான பின்னணியைக் கொண்டவை. வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில், மேல மாசி வீதியில் உள்ள நக்கீரர் கோவில் ஆகியவை வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. செல்லத்தம்மன் கோவிலில் கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகி சிலையைக் காணலாம்.சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.பொதுத் தகவல்கள்பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.மக்கள் தொகை: 10,93,702 (1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி).காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா.

அழகர்கோவில்
வைணவர்களின் புனிதத் தலமாக மதுரை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில், தொட்டில் போல உள்ள அழகர் மலை எனப்படும் அழகர் கோவில் விளங்கி வருகிறது. சிற்ப கலையின் சிறப்புக்கு சரியான உதாரணமாக, கோவில் உள்ள முகப்பு மண்டபத்திலும், மற்ற மண்டபங்களின் தூண்களிலும் உள்ள சிற்பங்கள் உள்ளன. சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்று வரும் இத்தலத்தை பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர். அழகர் கோவிலில், பெருமாள், சுந்தரராஜராக எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும், பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியைத் தரக் கூடியதாக உள்ளது. பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் இந்த கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தான்.

கிபி 1251 முதல் 1270 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தான். அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வீழ்ந்தபோது, கிருஷ்ணதேவராயன் இந்த கோவில் புணரமைப்பு பணிகள் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான். நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் மதுரை வந்தபோது, அழகர் கோவிலுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நாயக்க மன்னர்களும் அழகர் கோவிலைப் போற்றி பராமரித்தனர். கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்த கோவிலில் பல திருப்பணிகளை செய்தார். இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். இது பழங்கால கைவேலைப்பாடுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது. இங்கே வரும் பக்தர்களுக்கு சந்நதியில் பொய் பேச தைரியம் வராது. இதன் அருகில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக கூறப்படுகிறது. கோவிலில் உள்ள திருமண மண்டபதிலுள்ள தூண்களில் நாயக்கர்களின் சிற்பக்கலை மிளிர்வதைக் காணலாம். மதுரை மீனாட்சி கோவில் தூண்களில் உள்ளது போன்ற சிற்பங்களுடன் இங்குள்ள தூண்களும் எழிலுற காணப்படுகிறது. நரசிம்மர், கிருஷ்ணர், ரதி ஆகியோர் கிளி வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும், கருடவாகனத்தில் விஷ்ணு அமர்ந்திருப்பது போன்றும் இங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், திருமலை நாயக்க மன்னர் சிலைகளும் தூண் சிற்பங்களில் காணப்படுகிறது. அசோகர் காலத்திற்கு பின்னுள்ள சிற்பங்களும் இங்கு காணப்படுகிறது. இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான். சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு. தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.